சாத்தான்குளத்தில் காதல் திருமணம் செய்துவிட்டு தங்கையை கொடுமைப்படுத்திய கணவரை, அப்பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் சிவசூர்யா. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது. பலமுறை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து காவல் நிலையத்தில் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் ஏற்பட்ட தொடர் பிரச்சனை காரணமாக முத்துலட்சுமி தனது கணவர் சிவசூர்யாவை பிரிந்து தாயாரின் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையில், சிவசூர்யா சாத்தான்குளம் பகுதியில் உள்ள செட்டியார் கீழே தெருவில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நேற்று இரவு சிவசூர்யா கொத்தனார் வேலையை முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது வீட்டிற்கு முத்துலட்சுமியின் சகோதரர் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில், வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் கையில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சிவசூர்யாவின் கழுத்து, தலை, கை மற்றும் உடல்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சிவசூர்யா சாய்ந்து விழுந்தார். உடனே வீட்டை பூட்டி வைத்து விட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இதற்கிடையில் சிவசூர்யாவின் நண்பர் சிவசூர்யாவிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் கிடைக்காததால் வீட்டிற்கு நேரில் பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு சிவசூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். உடனே இதுகுறித்து சாத்தான்குளம் காவல்துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிவசூர்யாவை முதலுதவிக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிவசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிவசூர்யாவை கொலை செய்த வழக்கில் முத்துலெட்சுமியின் சகோதரர் வெங்கடேஷ், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சுடலைமுத்து ராஜா மகன் நாராயணன், தெற்கு ரதவீதியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்கண் ஆகிய மூவரையும் சாத்தான்குளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…