இந்தி பேசாத ஊழியர்களை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்களித்துவரும் நிலையில், மத்திய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே அவர்கள் தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள் தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளித்துவருகின்றனர். இருந்தபோதும், அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது. எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்றும் அந்தப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…