சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது. அதில், கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிமுகவின் எதிர்கால திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை முடுக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இது குறித்தும் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரிவாக விவாதிப்பார் எனத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வெளியிடுவார்கள் என அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தாலும், பாஜக-அதிமுக இடையேயான கருத்து மோதல்கள் முற்றிவரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…