திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரைத் திறந்துவிட்டார்.
காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட இந்த தண்ணீரானது இன்று காலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் மதகுகள், ஷட்டர்கள் ஆகியவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துகாக தண்ணீர் திறந்து விட்டார். அப்போது, திறக்கப்பட்ட தண்ணீரில் அவர் நவதானியங்கள் மற்றும் மலர்களைத் தூவி வணங்கினார். கல்லணை திறப்பின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ஆகிய மாவட்டங்களில், 3 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…