நுபுர் ஷர்மாவுக்கு எதிரான போராட்டம் எனக் கூறப்பட்டு கான்பூரில் கடந்த ஜூன் 3 அன்று நடந்த வன்முறை தொடர்பான வழக்கு டைரியை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகமது நபியைப் பற்றி அவதூறாக விமர்சித்ததற்காக பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவின் கருத்துக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறி, கான்பூர் நகரின் மிகப்பெரிய மொத்த சந்தைகளில் ஒன்றான பரேட் மார்க்கெட்டில் உள்ள கடைகளை மூடுவதற்கு உள்ளூர் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்தது.
ஆனால் இதற்கு அங்கு கடைகளை நடத்தி வருபவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அது மிகப்பெரிய கல் வீச்சு மற்றும் வன்முறை மோதலில் முடிந்தது. இந்த வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வன்முறை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை அளித்துள்ள நிலையில், அதை அரசு வழக்கறிஞர் தினேஷ் அகர்வால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
எஸ்ஐடி விசாரணையின்படி, கான்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று எனத் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபடுவதற்காக குற்றவாளிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
கல் வீசுபவர்களுக்கு 500-1000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், கலவரத்தின் போது பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தியவர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் வழக்கு டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகள் பிடிபட்டால் அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்ஐடி கூறியுள்ளது. 7 முதல் ஒன்பது நாட்கள் கலவரத்துக்கான பயிற்சி குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டதாக வழக்கு டைரி மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே ஜூன் 3 கான்பூர் வன்முறையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…