தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மணல் லாரிகள் எதுவும் ஓடாது என தமிழக அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் இது குறித்து அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஓவர் லோடு ஏற்றுவதை நிறுத்துவதாக அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் முடிவு செய்த நிலையில், ஆர்டிஓ அதிகாரிகள், ஓவர் லோடு ஏற்றும்படி லாரி உரிமையாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும் இதற்காக, ரூ.50,000 முதல் கட்டாய மாமூலும் வசூலிக்கின்றனர். ஓவர் லோடு ஏற்றி செல்லும் லாரி விபத்தில் சிக்கினால் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தர மறுக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களே இழப்பீடு தர வேண்டியுள்ளது. இதுபோல் விபத்தில் சிக்கிய 114 லாரிகள் இயங்காமலேயே உள்ளன. எனவே தான், நாங்கள் ஓவர் லோடு ஏற்ற மறுக்கிறோம்.
தமிழகத்தில் வாகனங்களில் பொருத்தப்படும் ரிப்ளெக்டிவ் ஸ்டிக்கர்களை, அங்கீகரிக்கப்பட்ட 13 நிறுவனங்களிடம் இருந்து வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டிக்கர்களுக்கு ஐந்து ஆண்டு ஆயுள் காலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் குறிப்பாக இரண்டு நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் வாங்கவும் அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் எம் சாண்ட் மற்றும் ஆற்று மணலை, அங்கீகரிக்கப்படாத பல குவாரிகளில் இருந்து திருட்டுத் தனமாக விற்கின்றனர். இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் லோடு கிடைப்பதில்லை. இந்த முறைகேடுகளை தடுக்கும்படி, போக்குவரத்து கமிஷனரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இதைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் ஆகஸ்ட் 18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…