பள்ளி சீருடையுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியை தருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்ததோடு, உரிய தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "டாஸ்மாக் கடைகள் இரவு நேரங்களிலும் செயல்படுவதால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் மது விற்பனை குறைந்தபாடில்லை. தமிழகத்தில் 21 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும். மேலும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்புகளை வைக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்." என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதை பார்த்த நீதிபதிகள், "பள்ளி சீருடடையுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும்போது, நாடு எங்கே சென்றுகொண்டிருக்கிறது என தெரிவியவில்லை." என்று கவலை தெரிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
வழக்கை தொடர்ந்த மனுதாரரை பாராட்டிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…