ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், பீகாரில் அவரது கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தில் (ஆர்ஜேடி) இணைந்துள்ளனர்.
நவம்பர் 2020 சட்டமன்றத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் தான் போட்டியிட்ட 20 சட்டமன்றத் தொகுதிகளில் 5ல் வெற்றிபெற்றதன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் பீகாரில் கட்சி வேகமாக வளர ஆரம்பித்தது.
இந்நிலையில், அக்தாருல் இமான் (அமூர் தொகுதி), முஹம்மது இசார் அஸ்பி (கோச்சடமாம்), ஷாநவாஸ் ஆலம் (ஜோகிஹாட்), சையத் ருக்னுதீன் (பைசி), அசார் நயீமி (பஹதுர்கஞ்ச்) ஆகிய ஐந்து எம்எல்ஏக்களில் அக்தாருலைத் தவிர, மீதமுள்ள நான்கு பேர் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 80 எம்.எல்.ஏக்களுடன் சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடியில் இணைந்தனர்.
"ஐந்து பீகார் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏக்களில், நான்கு பேர் இன்று எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறோம். இப்போது நாங்கள் பீகார் சட்டப் பேரவையில் மிகப்பெரிய கட்சியாக உள்ளோம்" என்று ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறினார்.
கடந்த பீகார் தேர்தலில் 1.24 சதவீத (5,23,279) வாக்குகளைப் பெற்ற ஏஐஎம்ஐஎம், உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய கிராண்ட் டெமாக்ரடிக் மதச்சார்பற்ற முன்னணியின் ஒரு அங்கமாக இருந்தது. இருப்பினும், குஷ்வாஹா 2013இல் தொடங்கப்பட்ட தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை (ஆர்எல்எஸ்பி) நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்துக் கொண்டார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வந்த ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசிக்கு தனது கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் கட்சி தாவியது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. பீகாரில் பெற்ற மெகா வளர்ச்சியை வைத்துத் தான் அவர் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சியை விஸ்தரிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…