வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 4ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் நிலைக்கொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது. இது படிப்படியாக குறைந்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் என மாறி நேற்று அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியது. குறிப்பாக நேற்று மாலையே இது புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காரைக்கால் கிழக்கு - தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே நாளை நள்ளிரவு கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் உருவானதைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…