தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள காகடியா மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் ப்ரீத்தி. இவர் கடந்த சில நாட்களாக தன்னுடன் பயிலும் மாணவிகளுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது, திடீரென இரவு நேர பயிற்சியின்போது மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில், மாணவி ப்ரீத்தி சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் மயக்க ஊசியை அவரது உடலில் அதிகளவில் செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், வாட்ஸ்அப்பில் பதிவாகியிருந்த சேட்கள் மூலம் ப்ரீத்திக்கு சீனியர் மாணவன் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டபோது ப்ரீத்தி சீனியரான முகமது சயீஃப் என்பவர் அவருக்கு ராகிங் தொல்லை கொடுத்ததாகவும், பயிற்சியின்போது சங்கடத்துக்கு உள்ளாக்கும் விதமாக மாணவியிடம் வேலை வாங்கியதாகவும், தகாத சொற்களால் அவரை காயப்படுத்தியாகவும் மாணவிகள் தெரிவித்தனர். இந்த ராகிங் தொடர்பாக ஏற்கனவே பெற்றோரிடம் மாணவி புகாரளிக்க, கல்லூரி நிர்வாகம் வரை சென்ற நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மறுபடியும் சீனியர் மாணவர் ஜாதியை குறிப்பிட்டு ப்ரீத்தியை ராகிங் செய்து துன்புறுத்திவந்துள்ளார். இதனால் மனமுடைந்துப்போன ப்ரீத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சயீஃபை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…