மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆவது ஏன் என தமிழக முதல்வரே நேரடியாக போன் போட்டு கேள்வி கேட்டதால் கமிஷனர் ஒருவர் வெலவெலத்துப் போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்த நாவலூரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பும் வழியில் சோளிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதல்வர் அழைப்பு மையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஈரோட்டில் இருந்து முதல்வர் அழைப்பு மையத்திற்கு அழைத்த நபர் ஒருவரிடம் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டு தெரிந்து கொண்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் துணை கமிஷனர் ஒருவரை நேரடியாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல்வர் அழைப்பு மையத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதமாவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத துணை கமிஷனர் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்து பதில் கூற முடியாமல் தடுமாறினார்.
இதையடுத்து இனிமேல் முதல்வர் அழைப்பு மையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை கமிஷனருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பின்னர் திருப்பூர் மாவட்ட அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல்வர் அழைப்பு மையத்திற்கு வந்த புகார் மீது மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…