உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இந்த ஆண்டு முஹர்ரம் அன்று பைக்கி ஊர்வலத்தை நடத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 3 அன்று நடந்த கான்பூர் வன்முறையைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க முஸ்லீம் சமூக மதகுருமார்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி கான்பூரில் ஒரு உள்ளூர் அமைப்பு முஹம்மது நபியைப் பற்றிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து வன்முறை மோதல்கள் வெடித்தன.
அப்போது நடந்த வன்முறையில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய 40 பேரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட பைக்கி ஊர்வலத்தை இந்த ஆண்டு மீண்டும் தொடங்க முஸ்லீம் சமூகத்தினர் திட்டமிட்டிருந்த நிலையில், கான்பூர் வன்முறை அதற்கு பேரிடியாக வந்தது.
இதனால் சமூகத்தில் அமைதி நிலவ இந்த ஆண்டு பைக்கி ஊர்வலத்தை நடத்த வேண்டாம் என முஸ்லீம் சமூகத்தினரே முடிவெடுத்துள்ளதாக, பைக்கி ஊர்வலத்தின் தற்போதைய பொறுப்பாளர் கஃபீல் குரேஷி உறுதிப்படுத்தினார்.
"நகரத்தின் சூழ்நிலையை மனதில் கொண்டு, இந்த ஆண்டு பைக்கி ஊர்வலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மொஹரம் அன்று மக்கள் தங்கள் வீடுகளில் பிரார்த்தனை செய்து நகரத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்." என்று அவர் கூறினார்.
தஞ்சீம் நிஷான்-இ-பைக் காசித்-இ-ஹுசைனின் கலீபா ஷகீல் மற்றும் தன்சீம்-அல்-பைக் காசித்-இ-ஹுசைனின் அச்சே மியான் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் நன்கொடைகளின் உதவியுடன் ஊர்வலத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த முடிவை கலீஃபா ஷகீலும் எதிரொலித்தார். "இந்த ஆண்டு பைக்கி ஊர்வலம் இருக்காது. இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 வன்முறையைத் தொடர்ந்து நகரத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் இதுபோன்ற எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளோம்." என்று அவரும் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில், "நகரின் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதிக்காக இந்த முடிவை எடுத்துள்ள இரு கலீஃபாக்களின் முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும்" என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…