தமிழகம் முழுவதும் மக்களுக்கு உடல் வலியுடன் கூடிய ஒருவகையான மர்ம காய்ச்சல், மீண்டும் வேகமாக பரவி வருவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் தற்போது வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மற்ற மாணவர்கள் மூலம் எளிதாக பரவுவதோடு, இதன் மூலம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிலருக்கு இரண்டு நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியை ஏற்படுத்துகிறது. இதோடு இருமலும் சேர்ந்து கொண்டால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரம் ஓய்வு எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை தொடங்கியபின் தான் இந்த மாதிரியான திடீர் காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும், சமீபகாலமாக ஆங்காங்கு பெய்து வரும் மழையால், இந்த காய்ச்சல் முன்னதாகவே பரவ ஆரம்பித்திருக்கிறது.
வழக்கமாக இந்த காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு இது அதிக அளவில் கஷ்டத்தை அளிக்கிறது. எனவே குழந்தைகளை அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் இந்த மர்ம காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…