தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று காலை ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள ராய்ரங்பூர் ஜெகநாதர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
அவர் மயூர்பஞ்சின் ராய்ராங்பூரில் உள்ள ஒரு சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்தார், அதன் பிறகு அவர் கோயிலின் தரையைத் துடைத்து சுத்தம் செய்தார். அவர் கோவில் தரையைத் துடைத்து சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், முர்மு இன்று ஜாஹிரா என்ற பழங்குடியினரின் வழிபாட்டு இடத்திற்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின பெண் தலைவரான திரௌபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த திரௌபதி முர்மு?
ஒடிசாவில் பின்தங்கிய மாவட்டமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஏழை பழங்குடி குடும்பத்தில் இருந்து வந்த திரௌபதி முர்மு சவாலான சூழ்நிலையிலும் தனது படிப்பை முடித்தார். ராய்ராங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் கற்பித்தார்.
ஒடிஷாவில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் பாஜக-பிஜு ஜனதா தளம் கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். பின்னர் ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் எனும் சிறப்பைக் கொண்டுள்ள முர்மு, ஒடிஷாவிலிருந்து வந்த முதல் பழங்குடியின பெண் கவர்னர் எனும் சிறப்பையும் கொண்டுள்ளார்.
தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முர்மு, குடியரசுத் தலைவராகும்போது, இந்தியாவின் முதல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் எனும் சிறப்பை பெறுவதோடு, இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவராகவும் இருப்பார். அவருக்கு தற்போது 64 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
முர்மு தன்னை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது பற்றி அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும், அதை நம்ப முடியவில்லை என்றும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின்படி செயல்படுவேன் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடைபெறும்?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூலை 21ஆம் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…