திருமணமான ஐந்தே மாதத்தில் இளம் கணவன் மனைவி ஜோடி சென்னையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை குறித்த பின்னணி விவரம் சோகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்று தொழில் செய்து வந்தார். கடந்த ஜனவரியில் இவருக்கு 20 வயது பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மதுரவாயல் பகுதியிலேயே வசித்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், உறவினர்கள் நேற்று செல்போனில் அழைத்தபோது போனே எடுக்கப்படவேயில்லை. கடையும் பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடும் திறக்கப்படாமல் உள்ளே பூட்டிக்கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் தற்கொலை காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. அந்த கடிதத்தில், ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால், குழந்தை பெற இயலாத காரணத்தால் தாங்களே தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, திருமணத்திற்கு பின்பு கணவன் மனைவி உடலுறவு கொண்டபோது எதிர்பாராத விதமாக கணவனின் ஆண்குறியில் நரம்பு அடைந்ததாகவும், இதனால் அதற்கு பிறகு உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு குழந்தை பிறக்காது என நம்பியதோடு, இதற்கு போய் எப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்ற தயக்கத்துடன் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
மன உளைச்சல் அதிகமான நிலையில், திருமணம் முடிந்த ஐந்தே மாதத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ, மன உளைச்சலால் அவதிப்பட்டாலோ உடனடியாக மாநில உதவி மையம் 104 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…