தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நாளை தொடங்க உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றப்பட்டது. இது புதுமைப் பெண் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழக அரசின் 2022-2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் தமிழகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 10.30 மணிக்கு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் என பங்கேற்க உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…