கண்ணகி எப்படி நியாயம் கேட்டு மதுரையை எரித்தாளோ, அதுபோல் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் கண்ணகியாக மாறி எல்லா இடங்களுக்கும் வருவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து பாஜக, அதிமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிகவும், மின்கட்டண உயர்வுக்காக தமிழக அரசுக்கு எதிராகவும், உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி போட்டதை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எடுத்த எடுப்பில், நூறுக்கும் பீருக்கும் சோறுக்கும் கூட்டம் சேர்க்கும் கூட்டத்தில் பாஜகவும் சேர்ந்துவிட்டதாக வாரியதோடு, இது தானா சேர்ந்த கூட்டம், மக்கள் பிரச்னைக்காக தேமுதிகவில் மக்கள் தானாக சேர்ந்துள்ளனர் என்றார்.
மேலும் பேசிய அவர், "விலைவாசி உயர்வை காரணம் காட்டி ஆட்சியை பிடித்த திமுக, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. கருணாநிதிக்கு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா அமைக்கதான் திமுக வரி வசூலிக்கிறதா? நடிகர் சங்க தேர்தலின் போதே மிகப்பெரிய பேனா வழங்கப்பட்டாயிற்றே.
மத்திய,மாநில அரசுகளிடம் நிதி இல்லை என்றால் ஏற்கனவே ஆண்ட கட்சி, ஆளும் கட்சி அமைச்சர்களின் ஊழல் பணத்தை வசூலித்தாலே போதுமே. எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அதுபோல் மக்களுக்கு ஒரு பிரச்னை எனில், இப்போது கண்ணகியாக மாறி நான் எல்லா இடங்களிலும் வருவேன்." என அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…