தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாகா குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பகுதியில் சில கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனுடன் தொடர்புடைய சின்னதுரை என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சின்னதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு சின்னதுரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சின்னதுரையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்நிலையில், சின்னதுரையின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதய கோளாறு காரணமாக கடந்த மாதம் தான் சின்னதுரைக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறிய அவரது உறவினர்கள், இந்த சூழலில் சின்னதுரைக்கு எப்படி சிறையில் அடைக்க மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, சின்னதுரை மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…