21 லட்சம் ரூபாய் பணமோசடி வழக்கில் நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சந்தானராமனை காவல்துறையினர் கைது செய்து, மன்னார்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர் நீடாமங்கலம் கீழத்தெருவில் வசித்துவரும் சந்தானராமன்., இவருக்கு கிருஷ்ணா என மற்றொரு பெயரும் உண்டு . இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் எழுத்தராக ஒரத்தூரைச் சேர்ந்த வீரக்குமார் , உர விற்பனையாளராக அதே ஊரைச்சேர்ந்த அன்பழகன் , நகை மதிப்பீட்டாளராக ஜெயராமன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் வங்கியின் கணக்குகள் தணிக்கையின் போது கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 200 ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான துறைரீதியான நடவடிக்கையில் 2018 ஆம் ஆண்டு சந்தானராமன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 4 பேர் மீதும் நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசாரிடம் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராமசுப்பு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். புகாரில் உள்ள 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதில் சந்தானராமன் 15 லட்சத்து 72 ஆயிரத்து 593 ரூபாய் ரொக்கம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். மீதி தொகையை மற்ற ஊழியர்கள் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்றும் சில நிபந்தனைகளையும் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். நீதிபதியின் தீர்ப்பை மதித்து எழுத்தர் வீரக்குமார், அன்பழகன் , ஜெயராமன் ஆகியோர் நடந்து கொண்டனர்.
அதேசமயம் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மதிக்காமல் நீதிமன்றம் விதித்த டெபாசிட் தொகையை செலுத்தாமல் சந்தானராமன் தலைமறைவாக இருந்தார். இது குறித்து நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதனை விசாரித்த நீதிமன்றம் சந்தானராமனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சந்தானராமனை நாகப்பட்டினம் போலீசார் சென்னையில் நேற்று 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தானராமன் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி வரும் 27 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சந்தானராமன் மன்னார்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…