திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூதாட்டி ஒருவர், 5 தலைமுறை உறவுகளுடன் சேர்ந்து தமது 100வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மனைவி சீனியம்மாள்(வயது100). இவருக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள். அதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணமைடைந்தவர். இந்நிலையில், தாயார் சீனியம்மாளின் 100வது பிறந்தநாளை பேரன், பேத்தி, கொள்ளுபேத்தி என அனைத்து உறவுகளுடனும் கொண்டாட, அவரின் மகன்களும், மகள்களும் முடிவு செய்தனர்.
இதையடுத்து, லிங்கவாடியில் சீனியம்மாளின் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்- பேத்திகள், கொள்ளுப்பேத்திகள், எள்ளுப்பேத்திகள் என மொத்தம் 85 பேர் ஒன்றுகூடி, சீனியம்மாளின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சீனியம்மாள் பாட்டியின் பிறந்தநாளையொட்டி, மரக்கன்றுகளை நட்டு, பட்டாசுகளை வெடித்து ஊர்வலமாக அவரை அகிலுள்ள மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, ஆரோக்கியத்துடன் சீனியம்மாள் வாழ சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து மூதாட்டி சீனியம்மாளை 100வது பிறந்தநாள் கேக் வெட்டச் செய்து, 5 தலைமுறை உறவுகளும் அருகில் நின்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
100வது பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டி சீனியம்மாள் சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். 75வது வயதில் கணவரை இழந்த சீனியம்மாள், அதன் பின் இயற்கை உணவுகளை மட்டுமே அதிகம் எடுத்துக்கொண்டுவருகிறார். தற்போது 100 வயதை கடந்தபோதும், யாருடைய துணையும் இல்லாமல், சமையல், கடைகளுக்கு செல்வது என அன்றாடப் பணிகளை தானே செய்துகொள்கிறார். 5 தலைமுறை உறவுகளுடன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய சீனியம்மாள், இந்த கொண்டாட்டம் மேலும் தன்னை உற்சாகப்படுத்தியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஊர்மக்களுக்கு சீனியம்மாள் குடும்பத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…