Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில்பாலாஜியை 15 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு - நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Saraswathi Updated:
செந்தில்பாலாஜியை 15 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு - நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!Representative Image.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கவுள்ளது.

கடந்த 13 தேதி சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் ஒரு குழுவினர் சோதனை நடத்தினர். மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சுமார் 18 மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.  அதேபோல், செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.

செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 29 ம் தேதி அன்று அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்பு, சம்மன் அனுப்பியதை தவிர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திடீரென்று தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது அமலாக்கத்துறைக்கு நன்றாக தெரியும் எனக் கூறினார்.

தொடர்ந்து வாதாடிய அவர், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவதாகவும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து  விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி, நீதிமன்றத்தில் ஆஜராகி செந்தில்பாலாஜி மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல், தற்போது மேற்கொள்ளப்பட்ட கைது வரையான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை 15 காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இன்று காலை உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்