தமிழகத்தில் செயல்பட்டுவரும் ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்களுக்கு தனியாக தங்கும் அறைகள் அமைக்கும்படி வீட்டுவசதித்துறை செயலாளர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறு தங்குகின்றனர். அவர்களை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு தங்கும் வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்களது வாகனங்களிலோ, ஹோட்டல் மற்றும் லாட்ஜ் வளாகத்திலோ தங்க வேண்டிய சூழல் இருந்துவருகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க முடியாமலும், தூங்க முடியாமலும் போவதால், அவை விபத்துகளுக்கு வழிவகை செய்கின்றன.
இந்த நிலையை மாற்றும் வகையில், வாகன ஓட்டுநர்களுக்கு ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்கி ஓய்வெடுப்பதற்கான தனி அறைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வீட்டுவசதித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு, அப்போது தலைமைச்செயலாளராக இருந்த இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். அதன்அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும்விடுதிகளில்(லாட்ஜ்கள்) கழிப்பறை, குளியல் அறை வசதியுடன் குறைந்தபட்சம் 8 படுக்கைகள் கொண்ட தங்கும் அறையை வாகன ஓட்டுநர்களுக்கு அமைத்துத் தருவதற்கான அரசாணையை வீட்டுவசதித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.
இந்த தங்கும் விடுதியானது ஹோட்டல் அல்லது லாட்ஜ் வளாகத்திலேயே அமைக்கலாம் என்றும், இடவசதி இல்லாதபட்சத்தில் 250 மீட்டர் சுற்றளவுக்குள் அமைத்துக்கொடுக்கலாம் என்றும் தமிழக ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…