திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலிருக்கும் குமாரமங்கலம் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு 17 வயதில் ஜெயஸ்ரீ, 11 வயதில் வர்ஷாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் காலையில் மகள்கள் இருவரையும் பைக்கில் அழைத்துச்சென்று பள்ளியில் விட்டுவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்டபாணி வழக்கம் போல் தனது மகள்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணியின் பைக் மீது மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீதும் மோதி சர்வீஸ் சாலையில் புகுந்தது.
அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சக்கரங்கள் ஜெயஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் மீது ஏறியதில் அவர்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தந்தையின் கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்தனர். தண்டபாணியும் படுகாயமடைந்தார்.
லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பாக, ஆம்பூர் நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து சென்னையை சேர்ந்த ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலனை (35) தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…