சிறப்புக் குழந்தையின் கை, கால்களைக் கட்டி கொடுமைப்படுத்திய வழக்கில் மழலையர் பள்ளி உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகியான மீனாட்சி என்பவர் நடத்தி வந்த 'மை பாட்டி வீடு' என்ற மழலையர் பள்ளியில், சிறப்புக் குழந்தையான 7 வயது சிறுவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். தன் மகனின் கைகளையும், கால்களையும் கட்டி சித்ரவதை செய்ததாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் அளித்த புகாரில், ஜூன் 21ஆம் தேதி மழலையர் பள்ளி நிர்வாகி மீனாட்சி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மீனாட்சி தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுவனை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்ததாகவும், அதைத் தட்டிக்கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், மீனாட்சிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
காவல்துறையின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி அல்லி, மனிதாபிமானற்ற முறையில் சிறப்புக் குழந்தையிடம் கடுமையாக நடந்துகொண்ட மீனாட்சிக்கு, ஜாமீன் பெற தகுதியில்லை என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…