வானிலை ஆராய்ச்சிக்காக என கூறிக்கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பல பலூன்களை பறக்கவிட்டிருக்கிறது சீனா. இதனால் பல நாடுகள் தங்களை சீனா உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியும் சந்தேகித்தும் வருகிறார்கள். கடந்த ஜனவரி 28ம் தேதி அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்த சீன பலூனால் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பான செய்தியை இந்த பகுதியில் விரிவாக காண்போம்.
உலகின் அசுரன் யார் என்பதில் போட்டி மிகக் கடுமையாக நிலவி வரும் சூழலில் ஏற்கனவே இருந்த பெரிய அண்ணன் அமெரிக்காவை தொழில்நுட்பத்தில் வீழ்த்த வேண்டும் என சீனா கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. இதனால் சீனாவை தங்கள் நட்பு நாடாக பார்க்கவில்லை அமெரிக்கா. ஆனாலும் சில ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளும் தங்கள் வர்த்தகத்தை தொடர்ந்து வருகின்றன. ஆனாலும் சீன தயாரிப்புகளுக்கு உலகின் பல நாடுகளும் சிவப்புக் கொடி காட்டி எதிர்ப்பையேத் தருகின்றன. அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் அச்சப்படுவதற்கு காரணம் சீனா தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த ஜனவரி 28ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் மாண்டானா மாகாணப் பகுதிகளில் பறந்து வந்த பலூன், அப்பகுதியிலுள்ள மால்ஸ்ட்ரோம் விமான படைத் தளத்துக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தது என கூறப்படுகிறது.
மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் என பல முக்கியமான பொருட்கள் இருக்கின்றன. இதனால் அமெரிக்கா இதனை அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இந்த விமானப் படைத் தளத்தை சீனா உளவு பார்ப்பதற்காகவே பலூனை பறக்க விட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இது நிச்சயமாக வானிலை ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும் சீன வானிலை ஆராய்ச்சி பலூன்கள் என அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் இந்த விளக்கத்தை அமெரிக்க அரசு ஏற்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக முடிவு செய்தது அமெரிக்க அரசு. பலூனை சுட்டு வீழ்த்துவது என முடிவு செய்தது.
அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் வெடித்து சிதறிய பலூன் அமெரக்காவின் கரோலினா பீச் நகரம் அருகே கடல் பகுதியில் விழுந்தது. விசயம் இத்துடன் முடிவடையவில்லை. இனிதான் ஆரம்பித்துள்ளது.
இதுவரை சீனா - அமெரிக்கா பனிப்போர் நடந்துகொண்டிருந்த நிலையில், இனி நேரடியான பல விசயங்களில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும் என தெரிகிறது. வானிலை ஆராய்ச்சிக்கான எங்கள் பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா.இது சட்டவிரோதம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது சீன வெளியுறவுத் துறை.
ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒரு அணியிலும், சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் எதிர் அணியிலும் நின்று கொண்டிருக்கின்றன. இப்படியே போனால் இது உலகப் போர் ஆபத்தில் முடியும் என பலரும் அச்சப்படுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…