மதம், மொழிகளை காரணம் காட்டி நாடு பிளவுபடுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்காள மாநிலம் உருவான தின விழா கொண்டாடப்பட்டது. இதில், மேற்கு வங்க அசோசியேஷனை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், வங்காளமும், தமிழ்நாடும் நம் நாட்டின் உருவத்தை பல முறை மாற்றியுள்ளன. தமிழ்நாடு பாரதம் எனும் கருத்தியலின் தூய்மைத் தன்மையை உருவாக்கிய ஒன்றாக உள்ளது. அதேசமயம், வங்காளம் பாரதம் எனும் கருத்தியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. வங்காளம் அனைத்து துறைகளிலும் பல அறிவாளிகளை உருவாக்கியுள்ளது.
1972ல் ஒரு பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் அறிக்கையின்படி, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் கடந்த நூறு முதல் இருநூறு ஆண்டுகளாகத்தான் பணக்கார நாடுகளாக உள்ளன. ஆனால், நம் பாரதம் 1800 ஆண்டுகளாக பணக்கார நாடாக இருந்துவருகிறது. இந்திய நாடு ஒரு தாழ்வு மனப்பான்மையில் சிக்கியுள்ளது. காலனி ஆதிக்கத்தின் தாக்கம்தான் அது.
மனித இனம் மொத்தமும் ஒரே குடும்பம் என்ற பார்வையை இந்தியா எப்போதோ பெற்றுவிட்டது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சிந்தனை இந்தியாவிற்கு வந்ததற்கு காரணம் உண்டு. இந்தியாதான் இந்த பூமியை வழிநடத்திச் செல்ல தகுதியுடையது.
மேற்கு வங்காளம் உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என நாம் யோசிக்கவேண்டும். 1905இல் இந்தியாவை பிரிக்க நினைத்தபோது தமிழ்நாட்டில் வ.உ.சி., பாரதியார் ஆகியோர் எதிர்த்தனர். ஆனால், 1947இல் பிரிவினை வந்தது. முஸ்லீம் லீக் கொண்டு வந்த பரிந்துரை அடிப்படையில் மேற்கு வங்காளம் பிரிந்தது. கிழக்கு பாகிஸ்தான் உருவானது. முஸ்லீம் லீக் கொண்டு வந்த சட்டத்தினால் வங்காளம் பிரிந்தது. நாடு என்பது மதம், மொழி ஆகியவற்றால் பிளவுபடுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நமக்கு முன்பிருக்கும் நோக்கம் மிகப்பெரியது. அதை வென்றெடுப்பதை நமது குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நம் நோக்கத்திலிருந்து நம்மை திசை திருப்பும் பலவீனங்களை நாம் தூக்கி எறியவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…