தூத்துக்குடி: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதால், வெளிப்படையாக உதவி செய்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சிவக்குமார் மகனும், நடிகருமான சூர்யா அகரம் பவுண்டேஷன் தொடங்கி பல ஆண்டுகளாக மறைமுகமாக உதவி செய்து வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதால், வெளிப்படையாக உதவிகளை செய்து வருகிறார்.
படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தலாம், பாராட்டலாம். அது வரவேற்க வேண்டிய விஷயம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். அவர், அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளிவிடக்கூடாது. இன்றைய அரசியல் தலைவர்களில் சிறந்தவர் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. அவரை ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக்க முடியவில்லை என்பது வேதனையான விஷயம்.
திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கும், இனத்தை வழி நடத்துவதற்கும் தகுதி என நினைப்பது அவமானகரமானது. இது மாறாது, இதை எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் திரைக்கவர்ச்சி இருப்பது பேராபத்து. நடிகர் விஜய் கட்சி தொடங்கினால் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…