தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று பகல்நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 4 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'பைபோர்ஜாய்' புயலானது, அதிதீவிர புயலாக வலுவடைந்து, வடக்கு - வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. வரும் 15ம் தேதி இந்தப் புயலானது குஜராத் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும், லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு, 165 கி.மீ., வேகம் வரை சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு சில இடங்களில் இன்று பகல் நேரத்தில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், இன்று நண்பகல் நேரங்களில் அவசியமின்றி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…