தெலங்கானாவில் பெய்து வரும் மழை வெளிநாட்டினரின் சதியாக இருக்கலாம் என அம்மாநில முதல் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. அதன்படி தெலங்கானாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தயார் நிலையில் மீட்புப் படையினர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள, தெலங்கானாவில் உள்ள கோதாவரி ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த மேக வெடிப்பு என்பது புது நிகழ்வாக உள்ளதாகவும், இது வெளிநாட்டினரின் சதியாக இருக்கலாம் என எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன்னர் இந்த மேக வெடிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், உத்திரகாண்டில் நடந்ததாகவும், தற்போது தெலங்கானாவில் நடப்பதாகக் கூறினார்.
இதனையடுத்து தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தெலங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…