கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான அலுவலகம் செயல்பட்டுவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 8 நாட்கள் நடந்த வருமானவரிச் சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணி முதல் கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
12 மணி நேர தொடர் சோதனைக்கு பிறகு கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ்க்கிற்கு சீல் வைத்து எச்சரிக்கை அறிவிக்கையை ஒட்டியுள்ளனர். அதில், அமலாக்கத்துறையின் அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ள நிலையில், சொந்த ஊரில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் சகோதரரின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் கரூர் பகுதி திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…