தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்க உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் 412 நீட் தேர்வு இலவச பயிற்சி மையங்கள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் நவம்பர் 3வது வார சனிக்கிழமைகளில் இருந்து, ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 பேரும், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…