மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்துவருகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை, கனமழை என மாறிமாறிப் பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால், அங்குள்ள மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
குற்றால அருவிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு தென்காசி மற்றும் சுற்றுப்பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காத வகையில் அருவிகளில் வெள்ள நீர் கொட்டிவருகிறது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறை இன்று தடை விதித்துள்ளது. சீசனை ரசித்து, அருவிகளில் குளித்து மகிழ குற்றலாத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் காவல்துறையின் இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…