டெல்லி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வரும் 3ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகதி மையதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக உயர்மட்டக்குழுத் தலைவர்கள் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பல கட்டமாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நடப்பு அரசியல் சூழ்நிலை, கட்சிகளின் அமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் 3ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலாசீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், ஜூலையில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகியவை குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரவும், பாஜகவில் மாநில அளவிலான பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…