சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் நினைவுச் சின்னம் அருகே கடலில் பேனா சிலை வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி காலமான பிறகு மெரினா கடற்கரையில் அவரது சடலம் புதைக்கப்பட்டு, அங்கேயே அவருக்கு நினைவுச் சின்னமும் அமைக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் பின்புறம் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கலைஞரின் நினைவிடம் அமைக்கும் திட்டத்துக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் தேவைப்பட்ட நிலையில், சில நிபந்தனைகள் விதித்து, மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம், கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே கலைஞரின் நினைவிடம் அமையும் இடத்தில் இருந்து, 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள், 137 அடி உயரத்துக்கு கருணாநிதியின் நினைவாக, ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறுவதற்கான பணிகளை பொதுப்பணித் துறை துவங்கியது. மாநில அரசில் தேவையான ஒப்புதல் அனைத்தும் பெற்ற நிலையில், மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பணியில் தமிழக அரசு ஈடுபட்டது.
இந்நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…