மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேயின் இளைய சகோதரர் நிர்மல் சௌபே பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் ஐசியூ வார்டில் முறையாக மருத்துவர்கள் பணியில் இல்லாததால் தான் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிர்மல் சௌபேக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இறந்தவரின் உறவினரான சந்தன் சௌபே கூறுகையில், ஐசியுவில் எந்த மருத்துவரும் இல்லை, செவிலியர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர் என்றார்.
"அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு 2 மணி நேரம் ஐசியூவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்திய அமைச்சர் கூறியும் ஊழியர்கள் எதுவும் செய்யவில்லை. மத்திய அமைச்சரின் சகோதரருக்கே இது தான் நிலைமை என்றால், சாமானியர்களின் அவலத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை." என்று சந்தன் கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசிம் குமார் தாஸ், "மருத்துவமனையில் இருந்த மூத்த டாக்டர்கள் மருந்து கொடுத்து ஐசியுவுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் ஐசியூவில் டாக்டர் இல்லை. இரண்டு டாக்டர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்துள்ளோம்." என்று விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பாகல்பூர் எஸ்பி அஜய் குமார் சவுத்ரி கூறுகையில், "இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. புகார் பதிவு செய்த பிறகு நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…