உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ தீயாய் பரவி வருகிறது. நாட்டுக்காக விளையாடும் வீரர்களை இப்படியாக நடத்துவது என உ.பி. அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஷகரான்பூர் மாவட்டத்தில் 17-வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கபடி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித்தொடரில் பங்கேற்க மாநிலம் முழுவதிலும் இருந்து பல மாணவிகள் ஷகரான்பூர் வருகை தந்துள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு அந்த மாநில விளையாட்டுத் துறை ஆணையம் சார்பில் உணவு, தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த நிலையில், போட்டித்தொடரில் பங்கேற்க வந்த வீராங்கனைகளுக்கு டாய்லட்டில் வைத்து பூரி, ரைஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், டாய்லட்டில் பாத்திரங்களில் வரிசையாக உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க வரும் வீராங்கனைகளுக்கு உரிய வசதியின்றி இப்படியா டாய்லட்டில் வைத்து உணவு வழங்கப்படும் என்று பலரும் மாநில அரசை கேள்விக்குள்ளாக்கி விமர்சித்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி உத்தர பிரதேச அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கிளப்பி வரும் நிலையில், ஷஹரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை மாநில அரசு இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…