விடுதலை சிறுத்தைகளின் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகத்தில் எந்தவிதமான பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது சரியான முடிவு என்றாலும், சமூக நல்லிணக்கப் பேரணிக்கும் அனுமதி மறுப்பது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கது, ஏனெனில் அவை இரண்டும் அரசியல் இயக்கங்கள் அல்ல.
ஆனால் விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் மாநில மற்றும் தேசிய அளவிலான அரசியல் கட்சிகளாகும். இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு எங்கள் தோழமை கட்சிகளான மதிமுக, மமக, தவாக, நாதக, எஸ்டிபிஐ, சிபிஐ (எம்.எல்- வி), தபுக என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் திக, திவிக, தபெதிக, போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த அற போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும். எனவே இதை மதம் சார்ந்த அமைப்புகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதல்ல. மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஜனநாயக வழியில் மக்கள் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும். எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று நடக்கவுள்ள எங்களது சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…