அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீரானதும் அவரை டெல்லி அழைத்துச் சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை தமிழக அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று பார்த்துவருகின்றனர்.
நள்ளிரவில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது நலமுடன் இருப்பதாகவும், உயர் ரத்த அழுத்தமும், ஈசிஜீயில் சிறு வேறுபாடும் இருப்பதால், அவருக்கு மாரடைப்பு வராமல் இருப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு வந்து சோதிக்கவுள்ளதாகவும், இன்று காலை 11 மணிக்கு அந்தக்குழு சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ள டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு, செந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதனைத் தொடர்ந்து அவரை டெல்லி அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சைகள் தேவைப்படுவதால், அதைக் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…