அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அவர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கானது முடித்து வைக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்து, முறையான பிளானுடன் எங்கும் தகவல் கசியாமல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அமலாக்கத்துறையினர் தங்கள் வந்த வாகனத்திலே அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…