கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் மிகுந்த பயத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று கருச்சிதைவு. ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாமாய் தாய்மையை அனுபவிக்க தயாராகும் பெண்களுக்கு இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒரு மாதிரியான வருத்தம் ஏற்படும். கருச்சிதைவு என்பது கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்கள் அல்லது மாதங்களில் திடீரென நிகழும் பொதுவான மற்றும் மோசமான ஒரு நிகழ்வு. ஏனென்றால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதம் வரை கருவானது நிலையானதாக இருக்காது; சில சமயங்களில் தானகவே கலையும் வாய்ப்பும் அதிகம். இதனால் தான், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூன்று அல்லது ஐந்து மாதங்கள் கழித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இப்படி கரு தானாகவே கலைந்து போவதற்கு என்ன காரணம்? அதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கரு சிதைவுக்கான காரணம்:
➥ கருச்சிதைவு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இதன் காரணம் அறியமுடியாததாக உள்ளது. இருப்பினும், கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவிற்கான பொதுவான காரணம், குரோமோசோம் பிறட்சிகள், அதாவது குழந்தையின் குரோமோசோமில் எதாவது தவறு நிகழ்வது.
➥ இந்த அசாதாரண மாற்றங்கள் பரம்பரை ரீதியாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஏற்படலாம். இது எல்லோருக்கும் உண்டாகாது என்றாலும், குடும்ப வழியில் உள்ள பெண்களுக்கு அதிகம் உண்டாகிறது.
➥ சில சமயங்களில், கருப்பை அல்லது கருப்பை வாயில் ஏற்படும் தொற்றுகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கருச்சிதைவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
➥ இதுதவிர, தைராய்டு நோய்கள், கருப்பை கோளாறுகள், இதய நோய் மற்றும் கடுமையான சிறுநீரக நோய்கள் ஆகியவையும் கருச்சிதைவை ஏற்படுத்தும். திடீரென ஏற்படக்கூடிய சில அதிர்ச்சியும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.
➥ 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனென்றால், வயது அதிகமாக குரோமோசோம்களில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவு கருச்சிதைவை ஏற்படுத்துகிறது.
➥ பொதுவாக, அதிகமாக புகைப்பிடிக்கும், குடிப்பழக்கம் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம். சில சமயங்களில் அதிக எடை மற்றும் குறைவான எடையும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.
➥ இதுதவிர, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் மின்காந்த அலைகள் அதிகளவு ஆக்ஸினேற்ற அழுத்தத்திற்கு வழி வகுக்கிறது. இது கர்ப்பிணி பெண்களின் திசு மற்றும் செல் சேதத்திற்கு ஆளாக்குகிறது. இதனாலும் கருச்சிதை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கருச்சிதைவுக்கான அறிகுறிகள்:
கரு கலையப்போகிறது என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். எனவே, அந்த மாதிரியான சமயங்களில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கருச்சிதைவுக்கான அறிகுறிகளாவன:
➥ மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் இரத்தப் போக்கு
➥ முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான பிடிப்புகள்
➥ இரத்தக் கட்டிகளுடன் கடுமையான இரத்தப் போக்கு
➥ எதிர்பாராத எடை இழைப்பு
➥ பிறப்புறுப்பின் வழியாக திசுக்கள் உறைந்து வெளியாவது
➥ பிறப்புறுப்பில் வெள்ளை - பிங்க் நிறத்தில் திரவம் வெளியேற்றம்
➥ மார்பக மென்மை, குமட்டல், வாந்தி போன்ற கர்ப்ப கால அறிகுறிகள் இல்லாமல் போதல்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…