குழந்தை பிறந்த பின்னர், குழந்தையைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில், குழந்தையைக் குளிப்பாட்டுவது முதல் சில கூடுதலான விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தையை சிலர் கையில் தூக்குவதற்கே பயப்படுவர். இதில், குளிக்க வைப்பது எப்படி என்று தெரியாமல் திணறுபவர்களும் உண்டு. இதனாலேயே, குழந்தையை குளிக்க வைப்பதற்கென ஒரு நபரை சேர்த்து விடுவர்.
வளர்ந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல, புதிதாக பிறந்த குழந்தைகளைக் கையாளக் கூடாது. எனவே, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாடும் போது மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் சாதாரண சோப்புகள், ஷாம்புகளைப் பயன்படுத்தக் கூடாது. பிறந்த குழந்தைகளுக்கென பிரத்யேகமான சோப்பு உள்ளது. இதில் பிறந்த குழந்தையை எப்படி குளிப்பாட்டலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.
குழந்தை பிறந்து 24 மணி நேரத்திலேயே குளிக்க வைக்கக் கூடாது. குளிக்க வைப்பதற்கு முன், குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது, குழந்தையின் உடல் வெப்பநிலை சுமார் 36.8 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக வரும் வரை காத்திருப்பது அவசியம் என்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு ஏற்பட உள்ள அபாயத்தைத் தவிர்க்க முடியும்.
பிறந்த உடனேயே குழந்தையைக் குளிக்க வைக்கக் கூடாது என்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. அதன் படி, வெர்னிக்ஸ் கேசோசா என்பது ஒரு பாதுகாப்பான அடுக்கு ஆகும். இது குழந்தைக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. சுற்றுச்சூழலில் எந்த வகையான தொற்றுகள் மற்றும் அழுக்குகளும் குழந்தையின் சருமத்தை நெருங்கக் கூடும். இவற்றிலிருந்து பாதுகாப்பதற்கே வெர்னிக்ஸ் உதவுகிறது. மேலும், நிபுணர்களின் கருத்துப்படி தொப்புள் கொடி விழுந்த பிறகு, அந்தப் பகுதி முழுமையாக குணமடைந்தபின் மட்டுமே முதல் தொட்டில் குளியல் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்.
முதலில் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு முன்னரே, எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம். அதிலும், குறிப்பாக குழந்தையை குளிப்பாட்டுவதற்குத் தேவையான துண்டு, சோப்பு, உடைகள் போன்றவற்றைக் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல, குழந்தையைக் குளிப்பாட்ட பெரும்பாலும் வெந்நீர் பயன்படுத்துவதே சிறந்தது. எனவே, அதிக சூடு இல்லாமல் வெதுவெதுப்பான தண்ணீரால் தொட்டியை நிரப்பிக் கொண்டு அதிலும் நீரின் வெப்பநிலையை 35 டிகிரி செல்சியஸ் அளவில் எடுத்துக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.
குழந்தையை குளியல் தொட்டியில் மெதுவாகப் படுக்க வைத்து அவர்களின் கழுத்து மற்றும் தலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தோளில் கை வைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமான துணி ஒன்றை எடுத்து, அதை நனைத்து குழந்தையின் உடல் பாகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். கழுத்து, கை, கால் மடிப்புகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் சருமம் மென்மையாக இருக்கும் என்பதால், அதனை அழுத்தித் தேய்க்கக் கூடாது. குழந்தைக்கு எந்த விதமான சோப்பும் பயன்படுத்த தேவையில்லை. குளியல் பொடி பயன்படுத்தியே குழந்தையைக் குளிப்பாட்டலாம்.
குளித்த பிறகு சிறு நேரத்திலேயே நமக்கு குளிர் உண்டாகும். எனவே, குளிர் ஏற்படாமல் இருப்பதற்கு 10 நிமிடங்களுக்குள்ளேயே குளியலை முடித்து விடலாம்.
குழந்தைக்கு தொப்புள் கொடி விழுந்த பின், உடல் முழுவதும் மசாஜ் செய்து குளிக்க வைக்கலாம். குறிப்பாக, குழந்தையைக் குளிக்க வைக்கும் போது, பக்கத்தில் ஆட்கள் வைத்திருப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…