பருவ கால மாற்றங்களால், நம் உடலிலும் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, எந்த காலமாக இருந்தாலும், காலத்திற்கேற்றவாறு நம்முடைய உடல்நலத்தினை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில், மழைக்காலமும் உள்ளது. இந்த மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் வரும். இந்த கொசுக்களால் நம் உடலுக்கு பல்வேறு நோய்கள் எழும். இந்த நோய்களின் அறிகுறிகளையும், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். இந்தப் பதிவில், மழைக்காலத்தில் உண்டாகக்கூடிய நோய்கள், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைக் காணலாம்.
மழைக்கால நோய்கள் காரணம்
மழைக்காலங்களில் பொதுவாக நோய்கள் அசுத்தமான குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலின் காரணமாக வருகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும். இல்லையெனில் மழைக்கால நோய்களால், இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்படைகின்றனர். இந்த வகை நோய்களால் பாதிக்கப்படுபவர்கள், எளிதில் குணமாவது என்பது சாத்தியமில்லை. அதிலும், குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், மழைக்கால நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவர்.
மழைக்கால நோய்கள்
மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடுவதால், கொசு உற்பத்தி அதிகமாகி விடுகிறது. இந்த கொடிய வகை கொசுக்களால் பரவும் நோய்கள் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்றவை ஆகும். மேலும், இதனால், மூளை அழற்சி ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதில், நோய்கள் குறித்தும், நோய்களின் அறிகுறிகள் குறித்தும் காணலாம்.
மலேரியா
கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று மலேரியா நோய் ஆகும். இது மழைக்காலங்களில் மிகவும் அதிக அளவில் பரவும் நோய் ஆகும். இதன் காரணமாக, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, நடுக்கம் உள்ளிட்டவை அறிகுறிகளாகத் தோன்றும். இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக, வீடுகளிலோ அல்லது வீட்டின் சுற்றுப்புறத்திலோ தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் ஆகும்.
காலரா
இந்த மழைக்காலத்தில் வரும் காலரா நோய், கொடிய நோய்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற நோய் ஆகும். இது பெரும்பாலும், அசுத்தமான குடிநீரை குடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை நோயினால், கடுமையான வயிற்றுபோக்கு ஏற்படும். இதனால், உடல் சோர்வடைவதுடன், உடல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். இந்த வகை நோயினைத் தடுக்க, மழைக்காலங்களில் குடிநீரை சூடுபடுத்திக் குடிப்பது நல்லது.
சிக்கன் குனியா
இது ஒரு கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் நோயாகும். மேலும், இதனால் மூட்டு வலி தூக்கமின்மை, கடுமையான தலைவலி போன்றவை ஏற்படலாம். கொசுக்களால் இந்த நோய் பரவுவதால், கொசுக்கள் பரவுதலைக் கட்டுப்படுத்துதலுக்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
டெங்கு காய்ச்சல்
மழைக்காலங்களில் பரவும் கொடிய வகை நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்று. இது மிகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதனால், கடுமையான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் உடலின் தடுப்புகள் போன்றவை ஏற்படும். கொசுக்கள் மூலம் பரவும் இந்த வகை நோயால், தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
மூளை அழற்சி
வைரஸ் பாக்டீரியா தாக்கத்தினால் இந்த மூளை அழற்சி நோய் ஏற்படுகிறது. இதனால், உடல் களைப்பு, காய்ச்சல், சோர்வு, தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படலாம்.
சளி
மழைக்காலங்களில் ஏற்படும் காற்றின் ஈரப்பதம் காரணமாக, அனைவருமே எளிதில் சளியால் பாதிக்கப்படுவர். இதனை வீட்டிலேயே சில வைத்திய முறைகளின் மூலம் குணப்படுத்தலாம். முக்கியமாக தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிப்பது அவசியம் ஆகும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
மேற்கண்ட நோய்களில் இருந்து விடுபடவும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.
✤ மழைக்காலங்களில் பொதுவாக செரிமான மந்தமாக இருக்கும். எனவே, அளவுக்கு மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.
✤ வீட்டின் உட்புறம் மட்டுமல்லாமல், வீட்டின் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மழைக்காலங்களில், எளிதில் சளி பிடிக்கக் கூடிய உணவு அல்லது பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும்.
✤ தண்ணீரை அவ்வப்போது கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
✤ வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பின்னர், கை மற்றும் கால்களை நன்கு சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
✤ உடலில் கிருமிகள் தங்குவதைத் தவிர்க்க, தினசரி வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…