ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளைகளை வைத்திருப்போர் ஆன்லைனில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே வரும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாடுபிடி வீரர்கள் அனைவரும் https://serviceonline.gov.in/ அல்லது https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் தங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதோடு, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் பதிவேற்ற வேண்டும்.
மேலும், போட்டி நடைபெறும் இரு நாட்களுக்கு முன்பாக கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை கொண்டு வருபவர்களும் தங்களுடைய காளைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் என இரு நபர்கள் மட்டுமே காளையுடன் வர முடியும்.
காளையுடன் வரும் இருவரும் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் போட்டி நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொரோனா இல்லை என்ற சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தவிர ஜல்லிக்கட்டு காளைகள் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் 300 மாடு பிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்களும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதோடு, போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…