இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவராக இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பலமுறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் 1984 ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தவர் என பல சிறப்புகளை கொண்டுள்ள பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 95 ஆண்டுகால வரலாற்றில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உயர் பதவியை வகித்த முதல் ஒலிம்பியன் மற்றும் முதல் சர்வதேச பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. உஷா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நீண்ட காலமாக நீடித்து வந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த மாதம் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் (IOC) இருந்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள் முதலில் 2021 டிசம்பரில் நடைபெறவிருந்தன. ஆனால் அது தாமதமான நிலையில், தற்போது பி.டி.உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் ராஜ்யசபாவுக்கு எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்ட உஷாவுக்கு, ஆளும் அரசின் ஆதரவு முழுமையாக இருந்ததால், அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவும் தயாராக இல்லை.
இதனால் தான் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் உஷா எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர். மேலும், 1934 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய மகாராஜா யாதவிந்திர சிங் சிங் மூன்றாவது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக 1938 முதல் 1960 வரை பதவியில் இருந்த நிலையில், அதன் பிறகு, சர்வதேச போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தலைமை ஏற்பதும் இது தான் முதல் முறையாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…