மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டாலும், புஜாராவே பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அடைந்த தோல்வி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உள்ளதை பிசிசிஐ ஒப்புக் கொண்டாலும், அதனை உடனடியாக செயல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணி 5 மாதங்களுக்கு பின்னரே தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மாற்றங்களை செய்ய பிசிசிஐ விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே, புஜாரா உள்ளிட்ட நான்கு பேரையும் ஒரே நேரத்தில் அணியை விட்டு நீக்காமல் ஒவ்வொரு மாற்று வீரரையும் உருவாக்கிய பின், மாற்றத்தை கொண்டு வரவே பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றே பார்க்கப்படுகிறது.
இதனால் இந்திய பிளேயிங் லெவனில் புஜாராவுக்கே வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா தொடரின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 3வது இடத்தில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. தொடக்க வீரராக சுப்மன் கில், 3வது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விளையாட வைக்கவே பிசிசிஐ விரும்புகிறது. அதேபோல் 50 ஓவர் உலகக்கோப்பை முடிவடைந்த பின்னரே கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மாவை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அதுவரையில் டெஸ்ட் அணிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படவுள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை முடிவடைந்த பின், டி20 அணி எப்படி உருவாக்கப்பட்டதோ, அதேபோல் டெஸ்ட் அணியிலும் புதிய வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்க பிசிசிஐ தயாராகி வருகிறது. அதேபோல் பந்துவீச்சிலும் முகேஷ் குமார், சைனி, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை கொண்டு வரவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…