சந்திராயன் -3 யின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலமாக நிலவில் தென் துருவப்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த உலகமே கொண்டாடிவருகிறது. இந்தியாவின் இம்மாபெரும் வெற்றிக்கு தமிழகத்திற்கும் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது. ஆம், இந்தியாவின் இந்த சந்திரப் பயணத்திற்கு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மண்ணும் முக்கிய பங்காற்றியுள்ளது. வாங்க விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
விண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போடும் இஸ்ரோ, கடந்த அக்டோபர் 22, 2008 அன்று சந்திராயன் -1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த முதல் சந்திராயன் பயணத்திற்கு தலைமை தாங்கியவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்த சந்திராயன் -1 விண்கலம் நிலவின் வட துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு, நிலவின் பரப்பில் பனிக்கட்டி விடிவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பு மற்றும் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கு எம்.வனிதா தலைமை தாங்கினார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் -2 ல் உள்ள விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், சந்திராயன் -2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர் முயற்சியின் காரணமாக தற்போது 2023 ஆம் ஆண்டு சந்திராயன் -3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரகமாக தரையிரக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் விழுப்புரத்தை சேர்ந்த எம்.வீரமுத்துவேல். சந்திரப் பயணத்தில் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மண்ணிற்கும் முக்கிய பங்கு உள்ளது.
சந்திராயன் -2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ள மண் தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்காவின் நாசாவிடம் இருந்து ஒரு கிலோ இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவில் அந்த வகை மண் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் அந்த வகை மண் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறை பேராசிரியர்கள் துணையுடன் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். அந்த மண்ணில் நிலவில் உள்ள மண் போல அனார்தசைட் என்ற வேதித்தன்மை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மண் மற்றும் பாறைகள் என சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைவைத்து தான் சந்திராயன் - 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப் பார்த்தனர். இதன் மூலம் சந்திரயான் பயணத்தின் திறனை சோதிப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) 2012 முதல் நாமக்கல் மாவட்டம் முக்கிய மண் சப்ளையராக உள்ளது.
அந்தவகையில், சந்திராயன் -3 சோதனைக்கும் இந்த மண் தான் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, மண் என்றால் கருஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால், சித்தம்பூண்டு, குன்னமலை பகுதியில் உள்ள மண் வெண்மை நிறத்தில் காணப்படும். இதற்காக அந்த இரண்டு கிராம மக்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது தான் இங்கு ஆச்சரியத்தின் உச்சம். இஸ்ரோவுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மண்ணை அனுப்பி வருகிறோம். இஸ்ரோவுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மண்ணை அனுப்பி வருகின்றோம். அவர்கள் (இஸ்ரோ விஞ்ஞானிகள்) நாங்கள் வழங்கிய மண்ணில் சோதனை நடத்தி வருகின்றனர். சந்திரயான்-4 திட்டம் வந்தாலும், அதற்கான மண்ணை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…