ஆன்மீகத் தலமான பழனிக்கு வரும் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வரும் நிலையில், அதை தடுக்க சுற்றுலா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில். சீசன் துவங்க உள்ள நிலையில் பழனிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மலை அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் புதிதாக போடப்பட்டுள்ளன.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நீண்ட நாட்களுக்குப்பிறகு மேற்கு மற்றும் கிழக்கு கிரிவீதிகளில் உள்ள சுற்றுலா பஸ் நிலையங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், கதவுகளை திறந்தும், பிக்பாக்கெட் அடித்தும் பணம் மற்றும் பொருட்களை திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெங்களூரூவில் இருந்து பழனிக்கு வந்திருந்த பவன் செட்டி என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களை சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகியிருந்ததை அடுத்து நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அங்கு தொடர்கதையாக மாறி வரும் சூழலில், திருட்டு சம்பவங்களை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…