செங்கல்பட்டு மாவட்டத்தில் மூதாட்டி இறந்துவிட்டதாக கருதி அவரது மகன் அடக்கம் செய்து, பால் ஊற்றி படையல் வைத்த நிலையில், மூதாட்டி உயிருடன் வந்த சம்பவம் உறவினர்களை திகைக்க வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரில் உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்த சந்திராவின் (72) கணவர் சுப்பிரமணி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் வடிவேலு பராமரிப்பில் சந்திரா வசித்து வருகிறார்.
சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், எப்போதும்போல சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக நேற்று வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன மகன் வடிவேலு உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அனைவரும் சந்திராவை தேடியுள்ளனர். அந்த நேரம் பார்த்து செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழுந்தது தெரியவந்தது.
அந்த மூதாட்டியின் உடல் பார்ப்பதற்கு சந்திரா போன்றே தோற்றமளித்ததால், அது தனது தாய் தான் எனக் கூறி வடிவேலு சடலத்தை பெற்று நல்லடக்கம் செய்து பால் ஊற்றியுள்ளார்.
இதையடுத்து சமூக வழக்கப்படி, சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்டபொழுது, அனைவரும் அதிர்ச்சியடையும் அந்த காரியம் நடந்தது. நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
பின்னர் தான் ரயிலில் அடிபட்டு இறந்துபோன மூதாட்டி சந்திரா இல்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் இறந்து போன மூதாட்டி யார் என விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…