ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 25வது நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல்.
திருப்பாவை பாடல் 25:
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பறை கேட்டு வந்த பெண்கள், தங்கள் வேண்டுகோளைக் கண்ணனிடம் வெளியிடும் பாடல் இது. கண்ணா! ஒப்பற்ற தேவகிக்கு மகனாகப் பிறந்த நீ, அன்று இரவிலேயே ஒப்பற்ற யசோதைக்கு மகனாகப் போனாய். உன் பிறப்புதான், கம்சனுக்குத் தெரியக் கூடாதென்று மறைக்கப்பட்டதென்றால், உன் வளர்ப்பும் அப்படியே அமைந்தது. அதனால் நீ, ஒளித்து வளர்க்கப் பட்டாய். அதைப் பொறுக்காத கம்சன், (நீ, அவனுக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் இருந்தும்) தானே, "இக்குழந்தையைக் கொல்ல வேண்டும்" என்று நினைத்துச் செய்த தீங்குகளை எல்லாம், நிறைவேறாத படிச் செய்தாய் நீ. தீயவனான அந்தக் கம்சனின் வயிற்றில், நெருப்பாக இருந்த பெருமாளே!
உன்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறோம் நாங்கள். எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றினால், லக்ஷ்மி தேவிக்கு ஈடான உன் செல்வத்தையும், உன் வீரத்தையும் நாங்கள் பாடுவோம். உன் பிரிவினால் உண்டான வருத்தமும், குளிரில் வந்த வருத்தமும் நீங்கி, நாங்கள் மகிழ்ச்சியடைந்து வாழுவோம்.
பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். உதாரணமாக, தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. அப்போது உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை.
பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மராய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவை பாடலை தினமும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும்.
இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…