Sai Baba History in Tamil: கடந்த பதிவில், எவ்வாறு இயற்கையின் சீற்றத்தை தணித்தார் என்பது பற்றியும், அவரின் தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாய் மாறியது குறித்தும், அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றத்தை எப்படி சுலபமாக சமாளித்தார் என்பது குறித்தும் பார்த்தோம். இருப்பினும், சாய்பாபாவின் அதிசயங்கள் இன்னும் முடியவில்லை. அவர் நிகழ்த்திய மற்றொரு அதிசயத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பல அதிசயங்கள் நிகழ்த்தியவாறு, சீரடியில் காலங்கள் ஓடிச் செல்ல, சில பக்தர்களிடம் தம் லீலைகளைச் செய்து காட்டியவாறும் இருந்தார். இவருடைய பக்தரான புரந்தரே என்பவரின் தாயாருக்கு, பண்டரிபுரத்திற்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஏக்கம் கொண்டிருந்தார். இந்த புனிதப் பயணத்தை மேற்கொள்ள பாபாவின் அனுமதியை நாடி காத்துக் கொண்டிருந்தார் அவர். இதனை அறிந்த பாபா, அந்த அம்மையாரிடம் சென்று,”எப்போது பண்டரிபுரத்திற்குச் செல்லப் போவதாக உத்தேசம்?” என்று கேட்டார்.
எப்படி தாம் சொல்லாமலே, தான் பண்டரிபுரத்திற்குச் செல்ல வேண்டும் என பாபாவிற்குத் தெரிந்தது என திகைத்துப் போனார். அப்போது தலை நிமிர்ந்து பாபாவைத் தரிசித்த அந்த அம்மையார், அங்கே பண்டரிபுரத்தில் கொலுவிருக்கும் பாண்டுரங்கனைத் தரிசித்தார். அந்த அம்மையார், மெய் சிலிர்க்க, பேச்சுக் குழற, “பாண்டுரங்கா!” என அழைத்து, இந்த ஏழையை நாடி நீயே வந்து விட்டாயா? என்று புலம்பிய படி அவரின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது சாய்பாபா,”பண்டரிபுரத்திற்குச் செல்ல வேண்டாமா அம்மா?” என சிரித்தபடி கேட்டார். உடனே, அந்த அம்மையார் “எனக்கு ஷீரடியே பண்டரிபுரம் பாபாவே பண்டரிநாதன்” என மனது முழுக்க மிக்க ஆனந்ததுடன் கூறினார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து, டாக்டர் ஒருவர் ஷீரடியில் உள்ள பாபாவைத் தரிசிக்க வந்தார். இவர் ஒரு இராம பக்தர். பாபா ஒரு முஸ்லீம் என எண்ணிய அவர், அவரைத் தரிசித்து வணங்கத் தயங்கி வெளியில் நின்று கொண்டிருந்தார். பாபா அவரை உள்ளே அழைத்தார். உள்ளே வந்ததும், அவர் பாபாவை நிமிர்ந்து பார்த்தார். அங்கே அவருக்கு, ஸ்ரீராமனாகவே காட்சி அளித்து தரிசனம் தந்தார் பாபா. இதில், அந்த டாக்டர் உடல் நடுங்க, பேச்சு குழற அவர் காலில் விழுந்து “கோதண்டராமா! இந்த ஏழைக்கா உன் தரிசனம்?” என புலம்பிய படி வணங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பாபாவின் பக்தர்கள் சிலர், நாசிக்கில் உள்ள காலா ராமரைத் தரிசிக்கச் சென்றனர். அங்கே கருவறையில் பாபாவே அமர்ந்திருப்பதைக் கண்டு மெய் சிலிர்க்க நேர்ந்தது. பாபா தம் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பும் விதமாகவே காட்சி தந்தார். பக்தர்களுடைய மனதுக்கினிய தரிசனத்தை தந்து அவர்களை நல்வழிப்படுத்தியதுண்டு. அவரது கடைசி நாள்களில் செல்வர்கள் ஏராளமான பணத்தை அவரது காலடியில் கொண்டு வந்து கொட்டினார்கள். அவை அனைத்தையும், அவர் இல்லாதவர்களுக்கு ஆசியுடன் வழங்கி விட்டார். அவர் முக்தி அடைந்த சமயத்தில் துவாரகமாயியில் மீதம் இருந்தது பதினாறு ரூபாய் மட்டுமே.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…